மும்பை நகரில் ஒருபோர்
செய்தி:அரபிக்கடல் வழியாக இந்தியாவின் நுழை வாயில்எனப்படும் கேட்வே ஒஃப் இந்தியா என்னும் பகுதியில் நீர்வழி மூலமாக 26 /11 /2008 அன்று பிளாஸ்டிக் படகு மூலமாக வந்துள்ளனர் தீவிரவாதிகள், மும்பையில் தாஜ் ஹோட்டலில் வந்து தாக்குதல் தொடங்கி மும்பையின் பல முக்கியமான பகுதிகளில் குண்டு மழை பொழிந்தனர் ,இந்த கொடூர தீவிரவாத தாக்குதலில் பல அப்பாவி பொதுமக்களும் அயல்நாட்டினரும் அடங்குவர்,அகில உலக பாதுகாப்புதுறை காவலர்களும், நம்முடைய காவல் துறையினரும் இணைந்து தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி, சில தீவிரவாதிகளை கைதிகளாக உயிரோடு பிடித்து மூன்று நாட்கள் கிட்டத்தட்ட 62 மணி நேரப்போராட்டத்தின் முடிவில் பொது மக்களை மீட்டனர். தீவிரவாதிகள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்து குஜராத்தில் இருக்கும் போர்ட்ப்லைர் என்னும் துறைமுகத்துக்கு வந்து அங்கிருந்து மும்பை இந்தியாவின் நுழைவாயிலுக்கு வந்துள்ளனர்.
திறமையாக போரிட்டு தீவிரவாதிகளை கொன்று அதிக அளவு ஏற்பட இருந்த அழிவை தடுத்த பாதுகாப்பு வீரர்களுக்கு நம் நன்றி,
ஏற்கெனெவே மஹாராஷ்டிரத்துக்கு தாக்குதல் வரக் கூடும் என்று செய்திகள் வந்திருந்தும், சரியான உடனடி நடவடிக்கை எடுக்காத அரசு விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. பதவிகள் எங்கும் போய்விடாது, நாடு இருந்தால்தான் பதவிகள் வகிக்க முடியும். நம்முடைய நாட்டின் பாதுகாப்பு விதிகளை, பாதுகாப்பு உபகரணங்களை இன்னும் பலப்படுத்துங்கள், அன்னிய நாட்டிலிருந்து பத்துபேர் வந்து நம் நாட்டில் இவ்வளவு சீரழிவுகளை எளிதாக ஏற்படுத்த முடிகிறதென்றால்...? நம் பாதுகாப்பு அமைப்புகளை இன்னும் பலப்படுத்தவேண்டிய அவசியத்தை நாட்டுமக்களே உணர்ந்து விட்டனர்.
நம்முடைய மரபுகளில் ஆலயங்களில் ப்ரதான தெய்வத்தை வணங்குவதற்கு முன்னர் அங்கே இருபுறமும் நிற்கும் துவார பாலகர்கள் என்னும் வாயிற்காவலர்களை வணங்கி மானசீகமாக அனுமதி கேட்டுக்கொண்டுதான் மூல விக்ரகமாகிய கடவுளை வணங்கவேண்டும் என்னும் ஒரு நியதியை வைத்திருந்தனர்.
அதுபோல இந்தியாவின்நுழைவாயிலில் சில வாயிற்காவலர்களையாவது அமர்த்தி விஞ்ஞான தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த நாட்களில் விஞ்ஞானக் கருவிகளை அவர்களிடம் அளித்து ஊடுருவு சோதனை மேற்கொண்ட பின்னரே இந்தியாவுக்குள் நுழைய முடியும் என்று ஒரு வரைமுரை ஏற்படுத்தி இருந்தால் இத்தனை பேரழிவுகளைத் தடுத்திருக்கலாமே.
இனியாவது நாட்டைப்பற்றி கவலைப்படுங்கள். நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்த்து பதறினோமே, அத்துடன் நம் கடமை முடிந்து விட்டதா? இப்படித்தான் நாம் அனைவருமே அடுத்த வினாடியிலிருந்து நம்முடைய இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிவிடுகிறோம். சற்றே நினைத்துப்பாருங்கள், மஹாராஷ்டிரத்தில் அல்லது நம் நாட்டில் அங்காங்கே நடக்கும் ஒவ்வொரு கலவரத்தின்போதும், தீவிரவாத நிகழ்ச்சிகளின்போது பாதிக்கப்பட்டு, தன்னுயிரையும் துறந்த அந்த சகோதரர்களின் வீட்டிலே இயல்பு நிலை திரும்புமா? அவர்களின் இழப்பு அவர்களுக்கு கிடைக்கும் பணத்தினால் ஈடுகட்டப்படுமா? இறந்துபோனவரின் குழந்தைக்கு தந்தை கிடைப்பாரா, அவரின் மனைவிக்கு கணவன் கிடைப்பாரா, அவருடைய தாய் தந்தையருக்கு அவர்கள் மகன் மீண்டும் கிடைப்பாரா?
இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் மிருகவெறி விதைக்கப்பட்டிருக்கிறது. நமக்கு அனியாயம் நடக்கும் போது அதைத் தட்டிக்கேட்க தைரியமில்லாமல் இருந்துவிட்டு மனதுக்குள்ளே குமுறினாலும் நம் இயலாமையை நினைத்து, நம்முடைய பலமின்மையால் சும்மாயிருந்துவிட்டு, திரைப்படங்களில் கதாநாயகன் பலரை அடிப்பதைப் பார்த்து ஏதோ நாமே நமக்கு அனியாயம் செய்தவரை அடிப்பது போல் மனதுக்குள்ளே மகிழ்ந்து நம்முடைய மிருக வெறியை தணித்துக்கொள்கிறோம். நம்மால் முடியாததை கதாநாயகன் செய்தவுடன் நம்முடைய எதிரியை நாம் அடிப்பதாக நினைத்து சாந்தப்படுகிறோம். நம் நாட்டில் எங்கு தீவிரவாதம் தலை தூக்கினாலும் உடனே நாம் அனைவரும் சேர்ந்து நம்முடைய ஆக்கசக்தியை பயன்படுத்தி, அவைகளைத் தடுக்க முயல வேண்டும். விபரீதங்கள் ஏற்படும்போது வீட்டுக்கதவைச் சார்த்திக்கொண்டு நாம் மட்டும் தப்பிக்க நினைக்கும் அவல நிலையை கைவிட வேண்டும், இல்லையென்றால் நாமும் ஒருநாள் தீவிரவாதத்துக்கு பலியாவோம் என்பதில் சந்தேகமே இல்லை. உணருங்கள், நாட்டில் எங்கு தவறு நடந்தாலும் தட்டிக் கேட்க பொதுமக்கள் ஒன்று கூடுங்கள். விபரீதங்களைத் தடுத்துவிட்டு, பிறகு காவல்துறைக்கும் செய்திகள் அளியுங்கள், அவர்களும் வந்து உதவுவார்கள். உணருங்கள் நம் கடமைகளை, அதை விடுத்து காவல்துறைக்கும் அரசாங்கத்துக்கும் மட்டும்தான் கடமைகள் இருக்கின்றன, நம்மைக் காப்பாற்ற நமக்கு எந்த ஒரு கடமையும் இல்லை என்று நாட்டின் நிலமையை உணராது, அலுவலகம் செல்வதும் தொலைக்காட்சி பார்ப்பதும் மட்டும்தான் நம் கடமை என்று நினைத்துக்கொண்டு, இப்படியே இருந்தால், கண்ணெதிரே நடக்கும் அக்ரமங்களை கண்டபின்னரும் நமக்கென்ன நாம் பாதுகாப்பாய் அங்கிருந்து அகன்று விடுவோம் என்னும் அச்ச உணர்வு இருக்கும் வரையில் நம் யாருக்குமே பாதுகாப்பில்லை. உணருங்கள், கூடிய விரைவில் மொத்தமாக அனைவருமே பாதிக்கப்படுவோம் என்பதில் ஐய்யமில்லை.
சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் வந்து சொன்னார், "நான் வரும் வழியில் பல ரௌடிகள் ஒன்று சேர்ந்து ஒரு மாணவனை அடித்துக்கொண்டிருந்தனர், நான் பதறிப்போய் விலகி வந்து விட்டேன்" என்று. அவருக்கு பின்னால்தான் தெரிந்தது, அடிபட்டது அவருடைய மகன்தானென்று. இது சரியான நிலைமையா? யார் பெற்ற பிள்ளைகளென்றாலும் உயிர் ஒன்றுதானே. மனித உயிர்களை மதியுங்கள், மனிதம் காக்க விழிப்புணர்வு பெறுங்கள், இல்லையென்றால் நாலு மாடுகள் ஒரு புலி கதைதான். தீவிரவாதம் வேறெங்குமில்லை, நம் மனதில்தான் இருக்கிறது. அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று ஆன்றோர்கள் சொல்லியவற்றை கருத்தில் கொண்டு நாடுகாக்க, நம்மக் காத்துக்கொள்ள, தீவிரவாதம் அழித்து, ஒரு நல்ல பாரதம் மலர ஒன்று படுங்கள். நமக்குள் பேதமில்லை, எந்த ஜாதி, எந்த மதம், எந்த மொழி, என்பதெல்லாம் முக்கியமில்லை மனிதம். அது ஒன்றுதான் முக்கியம் என்று உணருங்கள் ஒரு கட்டமைப்பான சமூதாயத்தை உருவாக்குவோம்.
பட்டிக்காட்டான், கிராமத்தான் என்று கேலி பேசுகிறோமே, கிராமத்திலோ, பட்டிக்காட்டிலோ அன்னியர் யாரும் வந்து அவ்வளவு எளிதாக உள்ளே நுழைய முடியாது. யார்? எவர்? என்று விசாரிக்காமல் உள்ளே யார் வீட்டுக்கும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இப்போது நாம் இருக்கும் இடத்திலேயே குடியிருப்பிலேயே தீவிரவாதிகள் தங்கி இருக்கிறார்கள், நாமும் அவர்கள் யாரென்று தெரியாமலே பழகிக்கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு அறியாமையான ஆபத்தான செயல். இனியாவது புதிய நபர் யாராவது வந்தால் பட்டிக்காட்டானைப் போல, கிராமத்தானைப்போல விசாரியுங்கள். நம்முடைய முன்னோர்கள் எல்லாவற்றையும் யோசித்து தான் ஏற்படுத்தி இருக்கிறார்கள், நாம் ஏதோ தேவலோகத்திலிருந்து நேரிடையாக வந்து இறங்கினாற்போல் முதியவர்களெல்லாம் முட்டாள்கள் போலவும் நம்க்கிருக்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு இனியாவது விழித்துக்கொள்வோம்.
சுதந்திரப் போராட்ட காலத்திலே வீட்டுக்கொரு ஆண்மகன் நாட்டைக் காக்க புறப்படுக என்று கோஷமிட்டாற்போல இப்போது நாட்டைக் காக்க வீட்டுக்கொரு முதியவர் (தோ பார்ரா பெரிசு உளருது) என்று தறுதலைகள் வசைபாடுவதைப்பற்றி கவலைகொள்ளாமல் நாட்டைக்காக்க புறப்படுக என்ற கோஷத்தோடு புறப்படவேண்டிய தருணம் வந்துவிட்டது. அழ அழச் சொல்லுவர் தமர், இனிக்க இனிக்க சொல்லுபவர் எதிரிகள். இச்சகம் பேசுபவர்களை இனம் கண்டு அறிவுடைய அனுபவமிக்க பெரியோர்கள் வழிகாட்டுதலை கைக்கொண்டு இளைஞர்கள் நாட்டை ஆள முன் வரவேண்டும். தன்னலமில்லாத இளைஞர்கள் பெண்கள் பின்னால் காதல் ஒன்றுதான் உலகத்திலேயே பெரியது என்று அலைவதை விடுத்து, தேசப்பற்றோடு முன் வரவேண்டிய தருணம் வந்துவிட்டது. இப்போதும் விழித்துக்கொள்ளாவிடில் மீண்டும் அடிமை இந்தியா உருவாகும் என்பது நிச்சயம்.
"அன்னியர் ஆண்டு வந்தார் அடிமைகளாய் நாம் மாண்டிருந்தோம்
அப்போது மீண்டோம் அன்னியரிடமிருந்து
எப்போது மீள்வோம் நம்மவரிடமிருந்து...?"
விழித்துக்கொள்ளுங்கள் இளைஞ்ஞர்களே, மலரட்டும் புதிய பாரதம்
அன்புடன்
தமிழ்த்தேனீ


